ஐபிஎல் புதிய விதிமுறை
இந்த சூழலில் தான் ஐபிஎல்-ல் யாருமே யோசித்துக்கூட பார்க்காத ஒரு விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் இம்பேக் ப்ளேயர் விதிமுறை ஆகும். இந்த விதிமுறையின் மூலம் ஒரு அணியில் இனி 12 வீரர்கள் விளையாட முடியும். வழக்கமான சப்ஸ்டிடியூட் என்றால் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியாது. ஆனால் இனி இந்த விதிமுறையால் ஒரு வீரரை முன்கூட்டியே சப்ஸ்டிடியூட் என அறிவித்துவிட்டு, அவரை பேட்டிங், பவுலிங் என எது வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும்.
கால்பந்து விதிமுறை
இந்த விதிமுறை எங்கேயோ பார்த்தது போல உள்ளது என பலரும் நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது சரிதான். கால்பந்துகளில் நீண்ட வருடங்களாக செயல்பாட்டில் இருக்கும் சப்ஸ்டிடியூட் விதிமுறை தான் இது. இதனை முதலில் சையது முஷ்டக் அலி கோப்பை மூலம் அறிமுகப்படுத்திய பிசிசிஐ தற்போது ஐபிஎல்-க்குள் கொண்டு வருகிறது. வரும் நாட்களில் இது சர்வதேச போட்டிகளிலும் நிச்சயம் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.
14 ஆண்டுகள் திட்டம்
இதுமட்டுமல்ல, சுமார் 14 ஆண்டுகளாக கால்பந்தை போன்ற கட்டமைப்பிற்கு கிரிக்கெட்டை மாற்ற தான் பிசிசிஐ முயன்று வருகிறது என்றால் நம்ப முடிகிறதா??.. இதற்கு உதாரணம் ஐபிஎல்-யே கால்பந்தை காப்பி அடித்த ஒன்று தான். கால்பந்து விளையாட்டில் அதிக பணம் புரள்வதற்கு காரணம், சர்வதேச போட்டிகளை மிக குறைந்த அளவில் வைத்துவிட்டு, ஒவ்வொரு உள்நாட்டு ரசிகர்களையும் கவரும் வகையில் உள்நாட்டு தொடர்களை கொண்டு வந்தது தான்.
அட்டகாசமான பலன்
அதே ஃபார்முலாவை பின்பற்றிய பிசிசிஐ முதல்முறையாக 2008ல் ஐபிஎல் என்ற உள்நாட்டு தொடரை கொண்டு வந்தது. இதன் மூலம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உருவெடுத்திருப்பதை அனைவரும் அறிவோம். தற்போது பெரும்பாலான நாடுகளும் இந்த உள்நாட்டு தொடர்களை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி தீணிப்போடுவது ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர் என்ற சூழல் உருவாகியுள்ள சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.
இனி சர்வதேச போட்டி இல்லையா?
ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையையும், நாட்களையும் ஒரேடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் சர்வதேச போட்டிகள் குறையும். வரும் நாட்களில் இன்னும் குறையலாம். ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள், ஐசிசி தொடர்களில் மட்டும் சர்வதேச நாடுகளை மோத வைத்துவிட்டு, ஆண்டின் மற்ற அனைத்து நாட்களிலும் உள்நாட்டு தொடர்களை நடத்த வேண்டும் என பேச்சுக்களை தொடங்கிவிட்டனர். இதே போல இந்திய வீரர்களும் அயல்நாட்டு தொடர்களில் விளையாடவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அப்படி நடந்தால் நிச்சயம் அனைத்து உள்நாட்டு தொடர்களின் போட்டி எண்ணிகளும் அதிகரித்துவிடும்.
வல்லுநர்களின் நம்பிக்கை
அதன்படி கால்பந்தாட்டத்தின் விதிமுறைகளும் ஐபிஎல்-க்குள் கொண்டு வரப்படுகிறது. எனவே இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கிரிக்கெட்டை மொத்தமாக உள்நாட்டு தொடர்களே ஆக்கிரமிக்கலாம் என பெரிதும் நம்பப்படுகிறது. உலகக்கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டை பார்க்கலாம்.