மும்பை: பாதுகாப்பு காரணங்களைக் காட்டி டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒருவேளை இந்தக் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக் கொண்டால் பிசிசிஐ-க்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படும்? அதன் பின்னணியில் உள்ள கணக்குகள் என்ன? என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
வங்கதேச அணியின் போட்டிகள் மாற்றப்படுவதால், பிசிசிஐ-யின் ஒளிபரப்பு வருவாயிலோ அல்லது ஐசிசி வழங்கும் மத்திய வருவாய் தொகுப்பிலோ (Central Revenue Pool) பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், உள்ளூர் மைதான வருமானம் மற்றும் போட்டி நாள் வருவாயில் நிச்சயம் சரிவு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி, வங்கதேசம் அணி குரூப் சுற்றில் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். கொல்கத்தா ஈடன் கார்டனில் மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக என மொத்தம் 3 போட்டிகள் உள்ளன. மும்பை வான்கடேவில் நேபாளத்திற்கு எதிராக ஒரு போட்டியில் ஆட திட்டமிடப்பட்டு உள்ளது.
கொல்கத்தாவில் 63,000 இருக்கைகளும், மும்பையில் 33,000 இருக்கைகளும் உள்ளன. ஆக மொத்தம், வங்கதேசம் விளையாடும் 4 போட்டிகளுக்கும் சேர்த்து சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய இடங்கள் உள்ளன.
ஐசிசி விதிகளின்படி, உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனைத் தொகை என்பது ஐசிசி-க்குச் சொந்தமான 'ஐபிசி' (IBC - ICC Business Corporation) நிறுவனத்திற்கே சேரும். பிசிசிஐ போட்டியை நடத்தும் அமைப்பாக மட்டுமே செயல்படும். எனினும், போட்டியை நடத்துவதற்கான கட்டணம், உள்ளூர் விளம்பரங்கள், உணவு மற்றும் இதர சேவைகள் மூலம் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும்.
வங்கதேசத்தின் 4 போட்டிகளும் இலங்கைக்கு மாற்றப்பட்டு, அந்தத் தேதிகளில் கொல்கத்தா மற்றும் மும்பையில் வேறு எந்தப் போட்டிகளும் நடத்தப்படவில்லை என்றால், பிசிசிஐ-க்கு நேரடி வருவாய் இழப்பு ஏற்படும். டிக்கெட் விற்பனை, மைதான விளம்பரம் ஆகியவற்றைச் சேர்த்து சுமார் ரூ.7 கோடி முதல் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வங்கதேசப் போட்டிகள் வெளியேறினாலும், அதற்குப் பதிலாக வேறு அணிகள் மோதும் போட்டிகள் (உதாரணமாக ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து) இந்த மைதானங்களில் நடத்தப்பட்டால், இழப்பு பெருமளவு குறையும். ஆனால், வங்கதேசம் - இங்கிலாந்து மோதும் போட்டிக்கு இருக்கும் மவுசு, சிறிய அணிகள் மோதும் போட்டிக்கு இருக்காது என்பதால் வருவாய் சற்று குறையலாம்.
இந்தியாவிற்குள்ளேயே அல்லது இலங்கை அட்டவணையுடன் மைதானங்களை மட்டும் மாற்றிக்கொண்டால், வருவாய் இழப்பு பெரிதாக இருக்காது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பாடுகளை மாற்றுவது நிர்வாக ரீதியாகப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும்.
வங்கதேசப் போட்டிகள் மாற்றப்பட்டால் பிசிசிஐ-க்கு ஏற்படும் இழப்பு என்பது கோடிக்கணக்கான ஒளிபரப்பு வருவாயுடன் ஒப்பிடும்போது மிகச் சிறியதே. ஆனால், கொல்கத்தா போன்ற வங்கதேச ரசிகர்கள் அதிகம் வரக்கூடிய மைதானங்களில் போட்டியை ரத்து செய்வது, உள்ளூர் கிரிக்கெட் சங்கத்தின் வருவாயில் நிச்சயமாக இழப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.