மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த ஊழியர் ஒருவரை கம்பீர் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.
ஆனால் அதற்கு தேவையான ரிசல்ட்டை கம்பீர் குழு தரவில்லை என கூறி பிசிசிஐ பலரை வீட்டுக்கு அனுப்பியது. இதில் பயிற்சியாளர் குழுவில் இருந்த அபிஷேக் நாயர், அருண் மற்றும் சோஹாம் தேசாய் ஆகியோர் அடங்குவார்கள்.

இதில் சோஹம் தேசாய்க்கு மட்டும் ஒப்பந்தத்தை நீட்டிக்க பிசிசிஐ மீண்டும் தொடர்பு கொண்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் இந்திய அணியில் 2010 ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்த ராஜூகுமார் என்ற நிர்வாகியை கம்பீர் வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றார். தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என மூன்று கேப்டன்களுடன் பணிபுரிந்த ராஜூகுமார் இந்திய அணியில் மிகவும் அறியப்பட்ட நபராகவே விளங்கினார்.
இந்திய அணி வெளிநாட்டிற்கு எங்கு சென்றாலும் சரி,உள்ளூரில் எங்கு சென்றாலும் சரி ராஜூகுமார் எப்போதுமே அணியில் பயணம் செய்வார். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உடல் தகுதியை மேம்படுத்த பிசியோ பணிகளை ராஜ்குமார் செய்வார். இந்த தருணத்தில் ராஜூகுமாரை கம்பீர் தேவையில்லை என கூறி வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
இதன் மூலம் 15 ஆண்டு காலமாக அணியில் தொடர்ந்து அவர் தனது பணியை முடித்துக் கொண்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, ராஜுவின் சேவையை போதும் என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது. அவருக்கு பதில் வேறொரு நபரை இந்திய அணி ஏற்கனவே பணி அமர்த்திவிட்டது.
இந்திய அணி நிர்வாகம் சொன்ன பரிந்துரைப்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது. இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுடன் நல்ல தொடர்பில் ராஜு குமார் இருந்து வந்தார். அவர் தற்போது நீக்கப்பட்டு இருப்பது வீரர்கள் மத்தியிலே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.