மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் பதவி நீக்கம் தொடர்பான வதந்திகளை பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜூலை 2024-இல் இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் காம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அண்மையத் தோல்விகளை அடுத்து, அவரது எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்தன.
இருப்பினும், கம்பீர் பதவிக்கு அச்சுறுத்தல் இல்லை என சைகியா தெளிவுபடுத்தினார். விவிஎஸ் லட்சுமணனை டெஸ்ட் அணியின் பொறுப்பிற்காக பிசிசிஐ அணுகியதாக சனிக்கிழமை பிடிஐ செய்தி வெளியிட்டது. எனினும் இந்த வதந்திகள் அனைத்தையும் சைகியா நிராகரித்தார்.

இது குறித்து பேசிய அவர், "இவை அனைத்தும் வதந்திகள். நாங்கள் யாரையும் விவாதிக்கவோ அணுகவோ இல்லை. ஒப்பந்தத்தின்படி அவர் தொடர்வார்" என்றார். லட்சுமணன் குறித்து பேசிய அவர், "பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, யூகத்தின் அடிப்படையிலானவை. சில மரியாதைக்குரிய ஊடகங்கள் வெளியிட்டபோதும், இவற்றில் உண்மை இல்லை."
"பிசிசிஐ இவற்றை திட்டவட்டமாக மறுக்கிறது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அறிக்கைகள் கற்பனையானவை, ஆதாரமற்றவை" என உறுதிபடத் தெரிவித்தார். கம்பீர் பொறுப்பேற்றது முதல், இந்தியா இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளையும், 10 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அவர் தலைமையில், வங்கதேசம் (2), மேற்கிந்திய தீவுகள் (2) எதிரான உள்நாட்டுத் தொடர்களிலும், ஆஸ்திரேலியா (1), இங்கிலாந்து (2) எதிரான வெளிநாட்டுத் தொடர்களிலும் இந்தியா வென்றது.
மறுபுறம், இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக (3) உள்நாட்டிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (3) வெளியிலும், இங்கிலாந்துக்கு எதிராக (2) வெளியிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (2) உள்நாட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது.
சொந்த மண்ணில் 5 டெஸ்ட்களில் தோல்வியுற்ற, மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் இருமுறை ஒயிட்வாஷ் செய்யப்பட்ட ஒரே இந்திய தலைமைப் பயிற்சியாளர் என்ற சோகமான சாதனைகளைப் படைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சைக்கிளில் இந்தியாவின் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் கடினம். மீதமுள்ள ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளை வென்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இந்தியா 2026 இல் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வெளிநாடுகளில் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அதைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 5 போட்டிகள் கொண்ட தொடருக்காக ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும்.