மும்பை : ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாக வேண்டும் என்றால் ரஞ்சி கிரிக்கெட் உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாட வேண்டும்.
ஆனால் சில காலமாக ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான டி20 போட்டியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் எந்த அணியில் இருந்து எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சூரியகுமார் யாதவ் டி20 தர வரிசையில் நம்பர் ஒன் வீரராக வலம் வரும் நிலையில் திலக் வர்மா ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் முக்கியவீரராக திகழ்ந்தார்.
இதனால் இருவருக்குமே அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இதுபோன்று குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டன் ஆக இடம் பெற்று இருக்கிறார். இதை போன்று ஐபிஎல் தொடரில் நடந்து முடிந்த சீசனில் 890 ரன்கள் விளாசிய கில்லுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை நட்சத்திரத் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 625 ரன்கள் குவித்திருக்கிறார். இதேபோன்று சஞ்சு சாம்சன் டி20 அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சாகலும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல் அணியிலிருந்து மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அக்சர்பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் என மூன்று வீரர்களுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று லக்னோ அணியிலிருந்து இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளர் ரவி பெஷ்னாய் வேக பந்துவீச்சாளர் என இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று பஞ்சாப் அணியில் இருந்து ஆர்ஸ்தீப் சிங், ஹைதராபாத் அணியிலிருந்து உம்ரான் மாலிக்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா, rcb-யில் இருந்து எந்த வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.