மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை நியமித்ததும் பல ஸ்டார் வீரர்களை சேர்க்காமல் விட்டதும் தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் முழு உடல் தகுதியுடன் இருந்தும் தம்மை சேர்க்கவில்லை என்று முகமது சமி நேற்று அஜித் அகார்கரை கடுமையாக சாடிய செய்தி பிசிசிஐ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஷமியை தொடர்ந்து முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரஹானே, தேர்வுக்குழுவை மறைமுகமாக சாடி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பேசிய ரகானே, தேர்வுக்குழுவை பார்த்து வீரர்கள் பயப்படக்கூடாது. நான் தேர்வு குழு உறுப்பினர்களை பற்றி பேச வேண்டும் என்று நினைக்கின்றேன். குறிப்பாக உள்ளூர் அணியை தேர்வு செய்யும் தேர்வு குழுவினர் முறையை மாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே தேர்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இல்லை சில சமயம் எட்டு ஆண்டுகள் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு தான் தேர்வு குழு உறுப்பினராக வர வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தவறான முடிவு. கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது. இதனால் தேர்வு குழுவினரின் மனநிலையும் அதற்கு ஏற்ப மாறி இருக்க வேண்டும்.
தற்போது கிரிக்கெட் மாறிவிட்டதால் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனநிலையை வைத்து தேர்வு குழுவினர் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. குறிப்பாக டி20, ஐபிஎல் போன்ற போட்டிகள் நவீன கால கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் முக்கியமாக மாறி இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல் நீங்கள் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ரகானே வலியுறுத்தியுள்ளார்.
ரஹானேவின் இந்த கருத்து குறித்து பேசிய புஜாரா பெரிய அணிகளுக்கு வேண்டுமானால் இதுபோன்று ஒரு நடைமுறையை கொண்டு வரலாம். ஆனால் சிறிய அணிகளுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் தேர்வு குழுவினராக வர வாய்ப்பு தர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டேன் என்பதால் ஒருவர் தேர்வு குழுவினராக வரக்கூடாது என்று சொல்வது முறையாக இருக்காது என்று புஜாரா கூறியுள்ளார்.