கோலி, ரவி சாஸ்திரியை எதிர்த்து தேர்வுக் குழு பேச முடியாது.. ஓப்பனாக பேசும் கிர்மானி
Recommended Video

மும்பை : முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அணி தேர்வாளர் சயீத் கிர்மானி தற்போதைய இந்திய அணி தேர்வாளர்கள் குறித்து தன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தற்போதுள்ள அணி தேர்வாளர்கள் அனுபவமற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலியின் முடிவுகளை கேள்வி கேட்பார்கள் என விமர்சித்துள்ளார் கிர்மானி.
சமீபத்தில் முரளி விஜய், கருண் நாயர், ஷிகர் தவான் ஆகியோரின் நீக்கம் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. இந்த நிலையில் தான் தேர்வாளர்கள் பற்றிய தன் கருத்துக்களை கூறி இருக்கிறார் கிர்மானி.

யார் தேர்வாளர்?
கிர்மானி, "என்னை கேட்டால் ரவி சாஸ்திரி தான் முக்கிய தேர்வாளர் என கூறுவேன். அவர், கேப்டன் கோலி மற்றும் மூத்த வீரர்கள் பேசி, அவர்களுக்கு யார் யார் வேண்டுமோ முடிவு செய்து, அதை தேர்வுக் குழுவிற்கு அனுப்புகிறார்கள்" என வெளிப்படையாக கூறினார்.

கேட்டுக் கொள்வது தான் வழி
"இப்போதுள்ள தேர்வுக் குழுவானது, அணி நிர்வாகத்தில் இருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகியோரோடு ஒப்பிட்டால் மிகவும் அனுபவமற்றவர்கள். அவர்கள் அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை கேட்டுக் கொள்வது தான் சிறந்தது. கோலி, ரவி சாஸ்திரியோடு வாக்குவாதம் நடத்த அவர்களால் முடியாது" என கிர்மானி கூறியுள்ளார்.

அனுபவம் குறைவு
இப்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவில் உள்ள ஐந்து நபர்களில் ஒருவர் கூட சொல்லிக் கொள்ளும்படியான அளவு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியவர்கள் இல்லை.

தேர்வுக் குழுவின் அனுபவம்
தேர்வுக் குழு தலைவர் பிரசாத் 6 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், உறுப்பினர்கள் சரண்தீப் சிங் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், தேவாங் காந்தி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், ஜாட்டின் பாரன்ஜ்பே 4 ஒருநாள் போட்டிகள், காகன் கோடா 2 ஒருநாள் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications