டெல்லி: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களை டெல்லி கோர்ட் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தாலும் கூட அவர்கள் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
எனவே ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை நீடிக்கிறது.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த மேட்ச் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் உள்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோருக்கு ஆயுள் காலத் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 36 பேர் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அதிரடித் தீர்ப்பை அளித்தனர். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 36 பேர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் கைவிடுவதாகவும் அறிவித்தது.
இதையடுத்து மீண்டும் ஸ்ரீசாந்த் விளையாட அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் தன் வழி தனி வழி என்ற கொள்கை உடைய பிசிசிஐ, கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, வாரிய முடிவு மாறாது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், பிசிசிஐ எடுக்கும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை முடிவும், தன்னிச்சையானது. எந்த கிரிமினல் வழக்குகளோடும் தொடர்புடையது அல்ல. வழக்குகளின் தீர்ப்பு இதைக் கட்டுப்படுத்தாது. எனவே தற்போதைய விவகார்திலும் பிசிசிஐ முடிவு மாறாது. அப்படியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.