
கடிதம் எழுதிய ஸ்டார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதியுள்ள மெயிலில், "ஆசிய கோப்பை தொடரில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் ஆடவில்லை என்ற செய்தி தொடர் தொடங்க 15 நாட்கள் இருக்கும் போது தான் வந்து சேர்ந்தது. அது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு. இந்த தொடரில் எங்கள் வியாபாரம் மற்றும் வருமானத் திறனை இது வெகுவாக பாதித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என ஸ்டார் நிறுவனம் குறிப்பிடும் நபர், விராட் கோலி தான்.

ஒப்பந்தம் சொல்வது என்ன?
ஸ்டார் நிறுவனம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சிறந்த தேசிய அணிகள் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஸ்டார் நிறுவனம் அழுத்தம் கொடுக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிசிசிஐ அதிகாரி பதில்
இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பெரேராவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில் "இந்த தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்யும் உரிமை பிசிசிஐ வசம் தான் உள்ளது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது ஒளிபரப்பு நிறுவனம் ஒரு வீரரை தேர்வு செய்ய சொல்லவோ அல்லது சிறந்த அணி என தேர்வுக் கமிட்டி தேர்வு செய்வதை கேள்வி கேட்கவோ எந்த வழியும் இல்லை" என அவர் தெளிவாக கூறியுள்ளார்.

இப்படி ஒரு பிரச்சனையா?
விராட் கோலி ஆசிய கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு என ஒரு பேச்சு இருக்கும் நிலையில், ஸ்டார் நிறுவனம் தன் வருமான இழப்பிற்காக கவலைப்பட்டுக் கொண்டுள்ளது. கோலி இல்லாத இந்திய கிரிக்கெட் போட்டியை யாருமே பார்க்க மாட்டார்களா? ஒரு ஒளிபரப்பு நிறுவனம் இது போல வீரர்கள் தேர்வு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது சரியா?


Click it and Unblock the Notifications