டெல்லி: தடை செய்யப்பட்ட லலித் மோடியை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதால் கோபமடைந்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது.
மோடி தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை ஆரம்பத்திலிருந்தே பிசிசிஐ எதிர்த்து வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தலையிட்டதால் பிசிசிஐயால் ஒரு அளவுக்கு மேல் போக முடியவில்லை.

ஏற்கனவே இந்தப் பிரச்சினை காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் எந்தப் போட்டியையும் நடத்தக் கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஜெய்ப்பூரில் எந்தப் போட்டியையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது மோடி வெற்றி பெற்றிருப்பதால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தையே சஸ்பெண்ட் செய்து விட்டது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வாரிய செயலாளர் சஞ்சய் படேல் இதை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது...
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் லலித் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30.4.2014 அன்று மதிப்புக்குறிய உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவோ அல்லது அதன் விதிமுறைகளுக்குப் புறம்பாகவோ , சட்டங்களுக்குப் புறம்பாகவோ எந்த ஒரு நபர் நடந்து கொண்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாரியத்திற்கு முழு உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படியும், கிரிக்கெட் வாரியத்தின் விதி 32ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தின்படியும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் சிவலால் யாதவ், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை தற்காலிகமாக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைத்துள்ளார்.
அதன் நடத்தை மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரண நிலுவையில் உள்ளது. மேலும், கிரிக்கெட்டின் நலம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுஇடைக்கால நிர்வாகக் குழு ஒன்று விரைவில் வாரியத்தால் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.