
ஐபிஎல்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னையில் ஏப்.9 ஆம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் இந்த முறை போட்டி 6 மைதானங்களில் மட்டுமே நடக்கிறது. அதே போல் வீரர்களுக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்கப்படாமல், பயணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பயோ பபுள் விளக்கம்
கிரிக்கெட் தொடரில் வீரர்கள் யாருக்கும் கொரோனா பரவ கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் விதிதான் பயோ பபுள் (bio-bubble). இந்த விதியின் படி தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்படுவார்கள். அவர்கள் அங்கு குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மட்டுமே செல்ல முடியும். பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களுக்கு வீரர்கள் செல்ல முடியாது. அதேபோல் இந்த பயோ பபுள் பகுதிக்குள் வெளி ஆட்களும் வர முடியாது.

விலக்கு
தற்போது இங்கிலாந்து - இந்தியா தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் நேரடியாக தங்களது தேசிய அணியின் பயோ பபுளில் இருந்து ஐபிஎல் அணியின் பயோ பபுளுக்கு மாறிக்கொள்ளலாம் எனவும் இடையில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்காக வீரர்கள் அணியின் தனிப்பட்ட பேருந்திலோ அல்லது தனிப்பட்ட விமானத்திலோ அழைத்துச்செல்லப்படலாம். ஆனால் மற்ற வீரர்கள், பயிற்சியாளார்கள், நிர்வாகிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம்.

சிறப்பு ஏற்பாடு
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ 12 பயோ பபுள்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் 8 பயோ பபுள் ஐபிஎல் அணிகளுக்காகவும், 2 பயோ பபுள் ஐபிஎல் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கும், மீதமுள்ள 2 பயோ பபுள் வர்ணனையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் ஆகும். அதே போல ஒவ்வொரு அணிக்கும் தலா 4 ஊழியர்களை கொரோனா பாதுகாப்பிற்காக பிசிசிஐ நியமித்துள்ளது. அவர்கள் தொடர் முழுவதும் அணிகளுடன் பயணித்து அவர்களை பயோ பபுள் கடைபிடிப்பதை மேற்பார்வை மேற்கொள்வார்கள்.


Click it and Unblock the Notifications











