மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது தொடர்பாக, இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஹரிஷிகேஷ் கனிட்கர் ஆகியோரிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
துபாயில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பைத் தொடரில், லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜூனியர் அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் சரணடைந்தது.

இந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, சமீர் மின்ஹாஸ் அடித்த 172 ரன்கள் உதவியுடன் 347 ரன்கள் குவித்தது. 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி, 26.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியைத் தழுவியது.
இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் ஆயுஷ் மத்ரே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய ஐபிஎல் அனுபவம் உள்ள வீரர்கள் இடம் பெற்றும் இந்திய அண்டர் 19 அணி படுமோசமாக தோல்வி அடைந்தது விவாதத்தை கிளப்பியது.
நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற பிசிசிஐ-யின் அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் எந்தவிதப் போராட்டமும் இன்றி 156 ரன்களில் சுருண்டது ஏன்? என நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த முக்கியத் தொடருக்கு முன்னதாக, அணியின் தோல்விக்கான காரணத்தை ஆராயவும், குறைகளைச் சரிசெய்யவும் பிசிசிஐ விரும்புகிறது. இதற்காகவே இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
வழக்கமாக ஜூனியர் அளவிலான போட்டிகளில், இதுபோன்று நிர்வாகம் விளக்கம் கேட்பது அரிதான விஷயம். ஆனால், பரம எதிரியான பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியில் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்றதை பிசிசிஐ நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 18 வயதான கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் பயிற்சியாளர் கனிட்கர் ஆகியோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.