மும்பை: வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் அடுத்தமாதம் 15ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியிலும் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
நேற்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பிசிசிஐயின் கான்பரன்ஸ் கால் கூட்டமும் கொரோனா பீதி மற்றும் அதையொட்டி இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், என்ன நடவடிக்கை எடுப்பது என்ற தெளிவு ஏற்படாதநிலையில், கூட்டம் நடத்துவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு கணக்கில் அடக்கிவிட முடியாத நிலையில் உள்ளது இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை சர்வதேச அளவில் 7 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இந்த தொற்றின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி நேற்றிரவு அறிவித்துள்ளார். இதையடுத்து நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வந்துகிட்டு இருக்கு.. இவரு என்னடான்னா.. ஆஸி. பிரதமருக்கு சரமாரி திட்டு.. கொந்தளித்த பிரபலம்!
இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஆண்டுதோறும் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, தற்போதைய உயிர் பிரச்சினையான கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்ற தெளிவு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வீரர்களுக்கு விசா மறுப்பு, மற்றும் 21 நாட்கள் ஊரடங்கு போன்றவை ஐபிஎல் தொடர் தற்போது நடைபெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஐபிஎல் தொடர் குறித்து தான் எந்தவிதமான கருத்தையும் கூறவிரும்பவில்லை என்றும், அது தன்னுடைய கைகளில் இல்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் இடையிலான வீடியோ கான்பரன்சிங் கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலையில் காத்திருப்பதே ஒரே சிறந்த வழி என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகள் கூறுகையில், ஐபிஎல் தொடர் ஏற்கனவே அடுத்தமாதம் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்த தற்போதைய சூழல் எப்படி மாறும் என்பதை பொருத்தே இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் 15ம் தேதிவரை பொறுமையாக காத்திருந்து, பின்பு முடிவெடுப்பதையே பிசிசிஐ விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து எந்தவிதமான தெளிவும் ஏற்படாத நிலையில் வீடியோ கான்பரன்சிங் கூட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை சீரானால் மட்டுமே ஐபிஎல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.