சென்னை: இந்திய அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகள் வரை அஸ்வினால் விளையாட முடியும் என்பதால், நிச்சயம் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வினால் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. இதனிடையே அஸ்வினின் வயதை கருத்தில் கொண்டு, அஸ்வினுக்கான மாற்று வீரரை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதற்கான முதல் படியாக துலீப் டிராபி தொடரில் 4 ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை அணியைச் சேர்ந்த தனுஷ் கோட்டியான், தமிழ்நாட்டின் வாஷிங்டன் சுந்தர், டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஹிருத்தி ஷோக்கீன் மற்றும் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் சரன்ஷ் ஜெய்ன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், சரன்ஷ் ஜெய்ன் பவுலிங் செய்வதை பார்க்கும் போது, முரளிதனின் நியாபகம் வரும்.
ஏனென்றால் விரலில் இருந்து பந்து வீசப்படும் போது சத்தம் வரும். பந்து சுற்றும் சத்தம் அவ்வளவு நன்றாக கேட்கும். ஆல்ரவுண்டர் இல்லையென்றாலும், ஓரளவிற்கு டவுன் ஆர்டரில் தாக்கு பிடிக்கக் கூடிய பேட்ஸ்மேன் தான். அதேபோல் மும்பையை சேர்ந்த தனுஷ் கோட்டியான் லைன் மற்றும் லெந்தில் ஒழுக்கமாக இருக்க கூடியவர்.
அதேபோல் பேட்டிங்கில் அசாதாரணமாக ரன்களை விளாசக் கூடியவர். மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவர். விக்கெட்டை கொஞ்சம் கூட அவ்வளவு எளிதாக கொடுக்க மாட்டார். இன்னொரு பக்கம் வாஷிங்டன் சுந்தர் தனது ஆக்ஷனில் மாற்றம் செய்துள்ளார். அதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. SENA நாடுகளில் 12 கிமீ வேகத்தில் பேட்ஸ்மேனை காற்றில் ஏமாற்றி வீழ்த்த வேண்டும்.
அப்படியில்லை என்றால் ஸ்பின்னர்களை எளிதாக அடித்துவிடுவார்கள். வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல் ஹிருத்தி ஷோக்கீன் மற்ற மூவரையும் விட இவர் கொஞ்சம் சிறப்பாக செயல்பட கூடியவர். அஸ்வின் போன்ற ஒரு ஸ்பின்னருக்கு மாற்றாக வர வேண்டுமென்றால், காற்றில் ஸ்பின் செய்ய வேண்டும். அதனால் 4 ஸ்பின்னர்களில் ஷோக்கீன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அடுத்த தலைமுறைக்கான வீரர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.