பெட்டிப் பாம்பாக அடங்கியது
மத்திய தகவல் கமிஷன் அமைப்பு தற்போது இதை உறுதி செய்துள்ளது. பிசிசிஐ தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வராமல் இருக்கிறது என பல புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. யாராவது இது தொடர்பாக வழக்கு போட்டால், பிசிசிஐ தன் பண பலத்தை வைத்து நாட்டின் சிறந்த வக்கீலை வைத்து வாதாடும். எனினும், இப்போது உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டியின் கீழ் இயங்குவதால் பெட்டிப் பாம்பாக அடங்கி உள்ளது பிசிசிஐ.
12 கேள்விகளுக்கு பதில் இல்லை
கீதா ராணி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிசிசிஐ தொடர்பான 12 கேள்விகளை விளையாட்டு அமைச்சகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்க முடியாத விளையாட்டு அமைச்சகம், அதை மத்திய தகவல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளது.
பதில் சொல்லாத பிசிசிஐ
மத்திய தகவல் கமிஷன் பிசிசிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை. பதில் அளிக்க அதிக நேரம் வேண்டும் என கேட்டதற்கு மறுத்து விட்டது கமிஷன். இதை அடுத்து பிசிசிஐ உடனடியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரவேண்டும் என கூறியுள்ளது அந்த கமிஷன்.
இனி ஒளிய முடியாது
இப்போது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இருந்து பிசிசிஐ தப்பிக்க நினைக்கிறது. அதற்கு ஒரே வழி உயர் நீதிமன்றம் தான். ஒருவேளை அங்கே வென்றாலும், எதிர் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றால் அங்கேயும் சென்று போராட வேண்டும். வழக்கு நடக்கும் காலத்தில் பிசிசிஐ தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கீழே வராமல் இருக்க முடியுமா? என்பதும் சந்தேகமே. சில நாட்கள் மட்டுமே பிசிசிஐ இந்த சட்டத்துக்குள் வந்தால் போதும், ஆயிரக்கணக்கான கேள்விக் கணைகள் தாக்கி விடும். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு வீரரை அணியில் ஏன் எடுக்கவில்லை என்பதையும் பொதுமக்களால் கேட்க முடியும். இனி பிசிசிஐ பாடு திண்டாட்டம் தான்.