மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பல்வேறு அணிகளையும், வீரர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் பிசிசிஐ எச்சரிக்கை ஒன்றை அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் விடுத்துள்ளது. அந்த ஹைதராபாத் தொழிலதிபருடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் அந்த எச்சரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-இல் மேட்ச் பிக்சிங் தொடர்பான சர்ச்சைகள் இதற்கு முந்தைய காலங்களில் எழுந்துள்ளது. பல்வேறு வீரர்களும் அணிகளும் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அது போன்ற சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்ச் பிக்சிங் செய்யும் நபர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவர் அனைத்து ஐபிஎல் அணிகள் உடனும் நெருக்கமாக பழக முயற்சி செய்து வருவதாக பிசிசிஐக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. அவர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்களுடன் நெருக்கமாக பழக முயற்சி செய்து வருகிறார். வர்ணனையாளர்களுடனும் அவர் நெருக்கமாக சில முயற்சிகளை எடுத்து வருகிறார் என்ற நம்பத்தகுந்த தகவல் பிசிசிஐக்கு கிடைத்ததை அடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.
அவர் இதற்கு முன்பும் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது எந்த தவறுகளும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐயின் ஆன்ட்டி கரப்ஷன் செக்யூரிட்டி யூனிட் இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. அந்த நபர் யாரையாவது தொடர்பு கொண்டால் அவர்கள் உடனடியாக பிசிசிஐக்கு அது குறித்து தெரிவிக்க வேண்டும்.
ஏற்கனவே அவர் சில வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அதிக விலை மதிப்புமிக்க நகைகளையும், பரிசுப் பொருட்களையும் அளித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர் ஒரு ரசிகர் போலத் தன்னை காட்டிக்கொண்டு அணிகளுடன் நெருக்கமாக பழக முயற்சி செய்து வருகிறார். அவர் வீரர்கள் தங்கும் ஹோட்டல் அறைகளுக்கு பலமுறை சென்று வந்து இருக்கிறார்.
அவர்களை தனது பார்ட்டிகளில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்து இருக்கிறார். சில வீரர்களின் குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முயற்சித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்களை அளிக்க முயற்சி செய்து இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சமூக வலைதளம் மூலமும் அவர் தொடர்பு கொள்ளக் கூடும் என்பதால் அனைவரும் கவனமாக இருக்குமாறு பிசிசிஐயின் எச்சரிக்கை விடுத்துள்ளது.