4 போட்டித் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் , டி20 தொடர்கள் நடைபெறவுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்திலும் நடத்தப்பட உள்ளது.
ரசிகர்களை அனுமதிக்க முடிவு
சென்னை சேப்பாக்கத்தில்நடைபெறவுள்ள போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க திட்டமிட்டு பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்ட நிலையில், அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை செய்யப்படவில்லை. இந்நிலையில் மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ள 3வது மற்றும் 4வது போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
1,10,000 பேர் போட்டியை ரசிக்கலாம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகாலமாக மைதானங்களில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் முதல் முறையாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கும்வகையில் மைதானம் கட்டடமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச போட்டியாக இந்தியா -இங்கிலாந்து தொடர் அமையவுள்ளது.
பிரதமருக்கு அழைப்பு
இதையொட்டி பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ மற்றும் அமித் ஷா ஆகியோர் இந்த 3வது போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் 4வது மற்றும் இறுதிப் போட்டியும் டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
50,000 ரசிகர்களுக்கு அனுமதி
இந்த மைதானத்தில் 1,10,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும் என்பதால் வரும் 24ம் தேதி ரசிகர்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் ஒரே நேரத்தில் 50,000 ரசிகர்களுக்கும் மேல் இந்த போட்டியை ரசிக்க முடியும். கடந்த ஆண்டில் நமஸ்தே டிரம்ப் நிகழ்வுக்காக இந்த மைதானத்திற்கு மோடி வந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக இந்த மைதானத்திற்கு வந்தால் மைதானத்திற்கு மேலும் மெருகு கூடும்.