மும்பை : இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் தன் மோசமான செயல்பாடுகளால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. பலரும் பயிற்சியாளர்கள், கேப்டன், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் என பலரையும் குறை கூறி வரும் நிலையில் பிசிசிஐ என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி இருந்தது.
தற்போது பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், இங்கிலாந்து சுற்றுபயணம் முடிந்த உடன் இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி விசாரிக்கப்படும் என கூறியுள்ளார்.
இது பற்றி வினோத் ராய் கூறுகையில், "நான் எந்த வாக்கும் கொடுக்கவில்லை. ஆனால், எப்பொழுதும் அணி மேலாளர் சமர்ப்பிக்கும் ஆய்வை கொண்டு விமர்சனம் செய்யப்படும். அதை வைத்து நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்" என கூறியுள்ளார்.
அணியின் மோசமான செயல்பாடுகளுக்கு காரணமான இந்திய அணி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகளை ஒட்டியே பிசிசிஐ இந்த பேச்சை எடுத்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த பிறகு கடுமையான எதிர்வினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே, கங்குலி, கவாஸ்கர் போன்றோர் ரவி சாஸ்திரி, கோலி ஆகியோரது முன்னேற்பாடுகள் மற்றும் வழிநடத்துதல் சரியில்லை என கூறி வரும் நிலையில் பயிற்சி குழுவில் மாற்றம் ஏதும் நிகழுமா? என்ற சந்தேகமும் உள்ளது.