சென்னை: ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பான முட்கல் அறிக்கையில் என். சீனிவாசன் குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கப்படாததால் அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 6வது தொடரில் பிக்ஸிங் தொடர்பான குறித்து விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி, தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3-ந் தேதி தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ள என்.சீனிவாசன், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என முட்கல் கமிட்டி கூறியது.
அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் பிக்ஸிங் முறைகேடு நடப்பதை சீனிவாசன், ஐபிஎல் சி.இ.ஓ. சுந்தர் ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிந்திருந்தும் அதைத் தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி என்பதுடன் அவருக்கு பெட்டிங் நடவடிக்கைகளில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முகுல் முட்கல் அறிக்கை குறித்தும் வாரியத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டுவது மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், முட்கல் அறிக்கையில் என். சீனிவாசன் மீது தவறாக எதுவும் சொல்லப்படவில்லை என்பதால் அவர் மீது பிசிசிஐ நம்பிக்கை கொள்கிறது. மேலும் ஐ.பி.எல். சி.இ.ஓ சுந்தரராமனுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரியம் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை சென்னையில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடத்துவது என்றும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு இந்த ஆண்டு முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்காருக்கு வழங்குவது என்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.