மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் ஃபிட்னஸ் தரம் குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், கம்பீர் மற்றும் ஃபிட்னஸ் நிபுணர் ஏட்ரியன் லீ ரூக்ஸ் ஆலோசனையின்படி பிசிசிஐ மிகவும் கடுமையான ஃபிட்னஸ் சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
'பிரான்கோ டெஸ்ட்' என அழைக்கப்படும் இந்த சோதனை, இனி இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஓட்டத் திறனையும், நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் திறனையும் உச்சகட்டத்திற்கு சோதிக்க உள்ளது.
இந்திய அணியின் புதிய வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஏட்ரியன் லீ ரூக்ஸ் என்பவரின் பரிந்துரையின் பேரில் இந்த புதிய சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், போதுமான அளவு ஓட்டப் பயிற்சிகளை மேற்கொள்வதில்லை என்றும், ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவதாகவும் கவனிக்கப்பட்டது.
அதனால் இந்த புதிய சோதனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். வீரர்களின் ஃபிட்னஸ் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் யோ-யோ டெஸ்ட்டை விடக் கடினமானதாகக் கருதப்படும் இந்த பிரான்கோ டெஸ்ட், ரக்பி போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் ஏரோபிக் Endurance-ஐ (நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் திறன்) சோதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கடுமையான ஓட்டப் பயிற்சியாகும். இதில் வீரர்கள் செய்ய வேண்டியது இதுதான்:
முதலில், 20 மீட்டர் தூரத்தை ஓடிவிட்டு, மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திரும்ப வேண்டும் (மொத்தம் 40 மீ). அடுத்து, 40 மீட்டர் தூரத்தை ஓடிவிட்டு, மீண்டும் திரும்ப வேண்டும் (மொத்தம் 80 மீ). இறுதியாக, 60 மீட்டர் தூரத்தை ஓடிவிட்டு, மீண்டும் திரும்ப வேண்டும் (மொத்தம் 120 மீ).
இந்த மூன்றையும் (40 + 80 + 120 = 240 மீட்டர்) ஒரு முறை முடித்தால், அது ஒரு 'செட்' ஆகும். இப்படி ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக 5 செட்களை வீரர்கள் முடிக்க வேண்டும். அதாவது, மொத்தமாக சுமார் 1200 மீட்டர் தூரத்தை வீரர்கள் ஓடி முடிக்க வேண்டும்.
இந்த 1200 மீட்டர் தூரத்தை வீரர்கள் ஆறு நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு குறைந்த நேரத்தில் முடிக்கிறார்களோ, அவ்வளவு ஃபிட்டாக இருப்பதாகக் கருதப்படுவார்கள். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள சில வீரர்கள் ஏற்கனவே இந்த சோதனையை எடுத்துள்ளனர்.
இந்த பிரான்கோ டெஸ்ட், ஏற்கனவே நடைமுறையில் உள்ள யோ-யோ டெஸ்ட் மற்றும் 2 கிலோமீட்டர் ஓட்டப் பந்தய சோதனைகளுக்குக் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யோ-யோ டெஸ்ட்: இதில் குறைந்தபட்சம் 17.1 புள்ளிகளைப் பெற வேண்டும்.
2 கி.மீ ஓட்டம்: வேகப்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம் 15 வினாடிகளிலும், பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் 8 நிமிடம் 30 வினாடிகளிலும் இந்த தூரத்தைக் கடக்க வேண்டும்.
கௌதம் கம்பீர் - ஏட்ரியன் லீ ரூக்ஸ் கூட்டணியின் இந்த புதிய நடவடிக்கை, இந்திய வீரர்களின், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் ஃபிட்னஸ் தரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது. இனி ஜிம்மை மட்டுமே நம்பாமல், மைதானத்தில் வியர்வை சிந்தி ஓடினால் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.