மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சில மாதங்களுக்கு முன் ஒரு புதிய விதியை வெளியிட்டது. அதன்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டுப் சுற்றுப்பயணங்களின் போது தங்கள் குடும்பத்தினருடன் தங்கும் காலத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விதி விராட் கோலியை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிசிசிஐயின் இந்த முடிவுக்கு சில முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தாலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரெய்னா, தான் பங்கேற்ற ஒரு பிரபலமான நிகழ்ச்சியில், குடும்ப ஆதரவு வீரர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசினார். குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களின் போது குடும்பத்தினர் உடனிருப்பது வீரர்களின் மன உறுதியையும், களத்தில் சிறந்த செயல்பாட்டையும் ஊக்குவிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
"பயணத்தின்போது குடும்பம் இருப்பது மிகவும் முக்கியம். பிசிசிஐயின் இந்த சமீபத்திய விதிக்கு நான் எதிராக இருக்கிறேன். குடும்பம், வீரர்களின் ஃபார்மை மாற்றியமைக்க உதவும். விராட் கோலி ஃபார்மில் இல்லாதபோது, தனது மகளைப் பார்த்தால், அவர் ரன் குவித்து தனது திறமையை நிரூபிப்பார். குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும், என் மனைவி இல்லையென்றால், 2018 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான் ஆட்ட நாயகனாக இருந்திருக்க மாட்டேன்" என்றார்.
ரன்கள் மற்றும் ஃபார்ம் பற்றிப் பேசியதுடன், வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் ரெய்னா எடுத்துரைத்தார். சர்வதேச அளவில் விளையாடும் வீரர்கள் எப்போதும் அழுத்தத்தில் இருப்பார்கள் என்றும், அத்தகைய சவாலான தருணங்களில் மனநல ஆதரவும் குடும்பத்தின் அருகாமையும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பிசிசிஐ புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு, வீரர்களின் மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடருக்கு (டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20) ஒருமுறை மட்டுமே வந்து, அதிகபட்சம் இரண்டு வாரங்கள் தங்கலாம்.
இந்த விதி வீரர்களை கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த உதவும் என்று பிசிசிஐ நம்புகிறது. ஆனால், ரெய்னா உட்படப் பலர், ஒரு வீரரின் வெற்றிக்குக் குடும்பத்தின் உணர்வுபூர்வமான மற்றும் மனரீதியான ஆதரவு சமமாக முக்கியம் என்று கருதுகின்றனர்.