மும்பை : உலகின் மிகப் பணக்கார விளையாட்டு வாரியம் என்றால் அது இந்தியாவின் பி சி சி ஐ தான். ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மேல் வருமான வரியாக பிசிசிஐ கட்டிருக்கிறது.
இப்படி பல பெருமைகளை சந்தித்து வரும் பிசிசிஐ, எலான் மஸ்கின் ஒரு வினோத சட்டத்தால் தற்போது பிரச்சினையை சந்தித்து வருகிறது. அதன்படி டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தற்போது மாற்றி அதற்கு எக்ஸ் என பெயர் வைத்திருக்கிறார்.

அதிகாரப்பூர்வ நிறுவனங்களும், வி.ஐ.பி.களும் பயன்படுத்தும் ட்விட்டர் கணக்கை உண்மைதான் என்பதை பயனாளிகள் தெரிந்து கொள்ள ப்ளூ நிறத்தில் ஒரு டிக் இருக்கும். ஆனால் எலான் மஸ்க் வந்த பிறகு இந்த ப்ளூ டிக் வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் எலான் மஸ்கின் இந்த விதியை பயன்படுத்திக் கொண்டு பலரும் காசுக்கட்டி போலியான கணக்குகளை தொடங்கி நாங்கள்தான் உண்மை என்பது போல் பல சேட்டைகளை செய்தனர்.
அமெரிக்காவில் ஒரு மருந்து நிறுவனம் பெயரில் போலி கணக்கை உருவாக்கி ப்ளூ டிக் வாங்கிவிட்டு நாங்கள் இனி இன்சுலினை இலவசமாக கொடுக்கப் போகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. இதனை அடுத்து ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியவர்கள் தங்களின் பெயரையோ அல்லது ப்ரோபைல் பிச்சர் மாற்றக்கூடாது என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களை தங்களுடைய சமூக வலைத்தள கணக்கில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக வைக்க சொல்லி இருந்தார். இதை அடுத்து பிசிசிஐ தங்களுடைய புரொஃபைல் பிக்சரை தேசியக் கொடியாக மாற்றினார்கள். இதன் விளைவாக ட்விட்டரின் புதிய விதியின் படி பிசிசிஐயின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.
தேசிய கொடியை வைத்ததற்கு எப்படி ப்ளூ டிக் நீக்கப்படலாம் என ரசிகர்களும் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். இதனை அடுத்து பிசிசிஐ டிவிட்டஎ கணக்கை மீண்டும் ப்ளூ டிக் கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. எலான் மஸ்கின் இந்த புதிய சட்டத்திற்கு பயந்து பலரும் தங்களுடைய ப்ரொபைல் பிக்சரை மாற்றாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.