எல்லாத்துக்கும் காரணம் சிஎஸ்கே, விவிஎஸ் லக்ஷ்மன் தான்...! மறுபடியும் வாய் திறந்த ‘யு’ டர்ன் வீரர்
சென்னை: ஓய்வு என்ற எனது முடிவை வாபஸ் பெற, சிஎஸ்கே அணியும், லக்ஷ்மனனுமே காரணம் என்று அம்பத்தி ராயுடு மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. அணியின் 4ம் இடத்தில் களம் இறங்கி விளையாடி வந்தார். அவர் தான் உலக கோப்பை தொடரில் 4ம் இடத்தில் விளையாடுவார் என்று ரவிசாஸ்திரியும், கோலியும் கூறி வந்தனர்.
ஆனால் நடந்த கதையோ வேறு. அவர் கழற்றிவிடப்பட்டார். அதிருப்தியடைந்த அம்பத்தி ராயுடு, அம்பத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓய்வு முடிவு
தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி வி பார்த்தசாரதி கோப்பையில் விளையாட வந்திருக்கிறார் ராயுடு. அப்போது தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டதாக அறிவித்தார். ஓய்வு முடிவு ஏமாற்றத்தினால் எடுத்த முடிவு, தற்போது இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

கடிதம் எழுதினேன்
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறேன். மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கிறேன். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பி உள்ள மெயிலில் நான் ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறேன்.

நான் ரெடி
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன். செப்டம்பர் 10ம் தேதி முதல் ஐதராபாத் அணியில் இணைய ரெடியாக இருக்கிறேன்.

எனது நன்றி
மேலும் கடினமான நேரத்தில் என் மனதை மாற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் ஆகியோருக்கு நன்றி. அவர்களே எனது ஓய்வு முடிவு திரும்பப் பெற காரணம். சிஎஸ்கே ரசிகர்கள் பெருமளவு என் மனதை தேற்றி என்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட மீட்டு வந்துள்ளனர் என்றார்.

5 ஆண்டுகள் கிரிக்கெட்
ஐதராபாத் அணியின் தேர்வாளர் நோயல் டேவிட், ராயுடு திரும்பியது எங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ராயுடுவுக்கு குறைந்தது 5 வருட கிரிக்கெட் உள்ளது. அவர் இளம் வீரர்களுக்கு நிறைய கற்பிக்க முடியும் என்றார்.


Click it and Unblock the Notifications