
அபார பந்துவீச்சு
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு சுருண்டது. தீபக் சஹார் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரின் வேகத்தில் சிக்கிய அந்த அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரே ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

இந்தியா வெற்றி
ஷிகர் தவான் 113 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 81 ரன்களை சேர்த்தார். சுப்மன் கில் 72 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 82 ரன்களை குவித்தார். இதன் மூலம் 3போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வீடியோ
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் தங்களது தேசிய கீதத்தை பாடி மரியாதை செலுத்துவார்கள். அந்தவகையில் நேற்று இந்திய வீரர்கள் பாடிக்கொண்டிருந்த போது இஷான் கிஷானை மட்டும் குளவி ஒன்று தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தது. முகத்தின் மீது அமர்ந்துக்கொண்டிருந்த போதும் அவர் பதற்றமின்றி பாடிக்கொண்டே இருந்தார். ஆனால் திடீரென குளவி அவரது காதுக்குள் செல்ல முயன்றது.

பின்னர் என்ன ஆனது
நீண்ட நேரம் பொறுமை காத்த இஷான் கிஷான், தேசிய கீதம் பாடுவதையும் நிறுத்திவிட்டு, அந்த குளவியை விரட்ட தொடங்கிவிட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் மீண்டும் தனது இடத்திற்கு வந்துவிட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications