செஸ்டர் லீ ஸ்ட்ரீட் : உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா, இலங்கை இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் திடீரென தேனீக்கள் படையெடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலக கோப்பை தொடரின் முக்கிய ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை சொதப்பி தள்ளியது. அனைத்து விக்கெட்களையும் இழந்து 203 ரன்கள மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் எந்த வீரரும் 30 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை.

போட்டியின் 47வது ஓவரில் இலங்கை வீரர்கள் உடானா, லக்மல் பேட் செய்து கொண்டிருந்த போது மைதானத்தில் திடீரென தேனீக்கள் கூட்டம் படையெடுத்தது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த நடுவர்கள், வீரர்கள் அனைவரும் குப்பற படுத்து தங்களை காத்து கொண்டனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.
போட்டியின் போது தேனீக்கள் குறுக்கிடுவது இந்த இரு அணிகளுக்கும் புதிது கிடையாது. 2017ம் ஆண்டு இதே போன்று இந்த இரு அணிகளும் மோதிய ஒரு நாள் போட்டியின் போது தேனீக்கள் குறுக்கிட்டதால் போட்டி 1 மணி நேரம் தடைப்பட்டது.
இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2008ம் ஆண்டு டெல்லி பெரஷ்லா கோட்லா மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட போட்டியின் போது தேனீக்கள் குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.