லண்டன்: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு மறக்கமுடியாத வெற்றியைத் தேடித் தந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸின் ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை முன்னாள் இங்கிலாந்து கேப்டன்களான மைக்கேல் வாகன், மைக் ஆதர்டன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர்களின் 'பாஸ்பால்' (Bazball) குறித்த கிண்டல்களை கண்டு கொள்ளாமல், ஜோ ரூட்டுடன் இணைந்து நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார் ஸ்டோக்ஸ். பின்னர், இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்டை ரன் அவுட் ஆக்கியது ஆட்டத்தின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி நாளில் ஒரு கேப்டனாகவும், பந்துவீச்சாளராகவும் பல கேம்-சேஞ்சிங் தருணங்களை உருவாக்கி, இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.

தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ளாத, தனது அணியின் மோசமான நிலையைக் கூட தனது திறமையாலும் மன உறுதியாலும் வெற்றியாக மாற்றக்கூடியவர் ஸ்டோக்ஸ் என்று வாகன் புகழ்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், "இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு தனித்துவமான கேப்டன் இதுவரை கிடைத்ததில்லை. டெஸ்ட் போட்டிகளின் மிகப்பெரிய தருணங்களை எப்படி வெல்ல வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஸ்டோக்ஸின் அணி நான் பார்த்ததிலேயே மிகவும் ரசிக்கத்தக்க அணி" என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
ஆட்டத்தின் கடைசி நாள் அன்று, முந்தைய நாள் சிறப்பாகப் பந்துவீசிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஜோஃப்ரா ஆர்ச்சரைக் கொண்டு பந்துவீச்சைத் தொடங்கியது ஸ்டோக்ஸின் ஒரு புத்திசாலித்தனமான முடிவு என வாகன் பாராட்டி உள்ளார். 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடந்ததை வைத்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியது.
நாசர் ஹுசைனும் இந்த முடிவை வரவேற்றார். "அந்த முக்கியமான தருணத்தில் ஆர்ச்சருக்கு தோள் கொடுத்து, அவரை நம்பி பந்துவீச வைத்தது ஸ்டோக்ஸின் சரியான முடிவு. ஒருவேளை அந்த புதிய பந்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால், இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கும்" என்று கூறி உள்ளார்.
"இரு இன்னிங்ஸ்களிலும் முக்கிய ரன்களை எடுத்தார், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அவர் என்ன ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன்" என்று ஆதர்டன் பாராட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.