
லண்டன் : பென் ஸ்டோக்ஸ் மீது இருந்த தாக்குதல் வழக்கில், அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவர் மீது கிரிக்கெட் ஒழுங்கு கமிட்டி விசாரணை நடத்த உள்ளது. அவரது ஒப்பந்தம் மற்றும் கிரிக்கெட் போர்டு விதிகளின்படி இந்த விவகாரத்தில் அவர் நடந்து கொண்டாரா என விசாரணை நடக்கும் என கூறப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் கடந்த வருடம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதை அடுத்து நண்பர்களுடன் கிளப்புக்கு சென்று மது அருந்தி உள்ளார். அவருடன் மற்றோரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-உம் உடன் இருந்துள்ளார். அவர்கள் வெளியே வந்த போது, ஒரு நபர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து, பென் ஸ்டோக்ஸ் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அதே சமயம், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவரை அணியிலிருந்து நீக்கியது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் உட்பட பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்தார். சில மாதங்களுக்கு பின்னரே அவரை அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு சாதகமாக முடிந்து, அவர் மீது கிரிக்கெட் போர்டுக்கு உட்பட்ட விசாரணை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அவர் ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்க மறுக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து விட்டதால், மேற்கொண்டு தண்டனை அளிக்க வேண்டியதில்லை என கூறுகின்றனர்.
வேறு சிலரோ, அவர் கிரிக்கெட் போர்டு விதிகளை மீறி செய்த செயல்கள் வெளியே வரவேண்டும். கிரிக்கெட் போர்டு அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.
பென் ஸ்டோக்ஸ் மீதான நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் அணியில் சேர்த்துக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, விதிகளை மீறியதற்காக தடை உள்ளிட்ட தண்டனைகளை அளிக்க முற்பட்டால் கூட, ஏற்கனவே அவர் இழந்த போட்டிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.