பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திடீரென டிக்ளேர் செய்து அதிர்ச்சியளித்துள்ளார். அவரின் நடவடிக்கை சரியா என்பது குறித்து பார்க்கலாம்.
இங்கிலாந்து கேப்டன் பதவியை பென் ஸ்டோக்ஸ் ஏற்றபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் Bazball திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். அறிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டை புதிய தரத்திற்கு கொண்டு சென்றார். இதன் விளைவால் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாசத்தை எழுதி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் முதல் நாள் பேட்டிங்கின் போதே டிக்ளேர் செய்யவும் முயற்சிப்போம் என்று பென் ஸ்டோக்ஸ் கூறி இருந்தார். கேப்டன்சி பொறுப்பை ஏற்றபோது என்ன சொன்னாரோ, அதனை ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே செயல்படுத்தி பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ரூட் சதம் விளாசி அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், திடீரென டிக்ளேர் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் முதல் இன்னிங்ஸில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை மூன்றாவது செஷனில் சேர்ப்பார்கள். 2வது நாளிலும் பேட்டிங்கை தொடரவே விரும்புவார்கள். 2வது நாளின் 3வது செஷனில் தான் பெரும்பாலும் டிக்ளேர் செய்யும் முடிவுக்கு செல்வார்கள். ஏனென்றால் 2 நாட்கள் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் சோர்வடைந்திருக்கும் போது, உடனடியாக சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இதனை முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி முயற்சித்துள்ளது.
முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு கடைசி 15 நிமிடங்கள் இருந்த சூழலில், திடீரென டிக்ளேர் செய்து பந்துவீச வந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் முயற்சித்த நிலையில், வார்னர் - கவாஜா கூட்டணி விக்கெட்டை இழக்காமல் 14 ரன்களை சேர்த்தது. ஏற்கனவே எட்ஜ்பாஸ்டன் பிட்ச் தார் ரோட்டை போல் பிளாட்டாக இருக்கும் நிலையில், வார்னர் ஒரேயொரு செஷன் பேட்டிங் செய்தாலே இங்கிலாந்து அணியின் பதற்றத்தை அதிகரித்துவிடுவார். இதனால் பென் ஸ்டோக்ஸ் தவறான முடிவை முதல் நாளிலேயே எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.