லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி வேகமாக முன்னேறி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிராவுடன் 57 புள்ளிகள் பெற்று 36.54 சதவிகித வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
இதனிடையே தி ஹண்ட்ரட் லீக் தொடரில் விளையாடிய போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக போப் செயல்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் காயமடைந்து ஓய்வு நாட்களில் பென் ஸ்டோக்ஸ் என்ன செய்யப் போகிறார் என்பதை இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே எனக்கு மெசேஜ் அனுப்பிவிட்டார். காயமடைந்தாலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பென் ஸ்டோக்ஸ் செயல்பட உள்ளதாக என்னிடம் கூறியுள்ளார்.
இதனால் பிரண்டன் மெக்கல்லம் என்ன செய்யப் போகிறார் என்பது தான் எனக்குள் இருக்கும் குழப்பம். பென் ஸ்டோக்ஸ்-க்கு பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே அதிக விருப்பம். சில நேரங்களில் நாம் அதிகளவிலான கிரிக்கெட் விளையாடாத போதும், காயமடைய வாய்ப்புகள் உள்ளது. எனக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவதே பிடிக்காத விஷயம். பலருக்கும் அது பிடிக்காது என்று கருதுகிறேன்.
இதனால் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ஸ்டோக்ஸ் விரும்பியதால், லீக் போட்டிகளில் பங்கேற்றார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு இது சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. ஏனென்றால் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் ஒரு அணியை கட்டமைக்க இங்கிலாந்து அணி முயற்சிக்கலாம். இலங்கை அணிக்கு எதிரான தொடர் அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் - பிரண்டன் மெக்கல்லம் இருவருக்கும் இடையில் மிகச்சிறந்த புரிதல் இருப்பதன் காரணமாகவே இங்கிலாந்து அணியால் பேஸ் பால் அணுகுமுறை மூலம் வெற்றியை பெற முடிகிறது. இம்முறை போப் கேப்டனாக செயல்படவுள்ள நிலையில், பேஸ் பால் அணுகுமுறையில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.