அகமதாபாத்: நாளை தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. நாளை முதல் நவ.19ஆம் தேதி வரை உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் 2019ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்க தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்காக ஓய்வில் இருந்து திரும்பி வந்த பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 184 ரன்களை விளாசி தனது ஃபார்மை நிரூபித்தார். இவரது வரவால் இங்கிலாந்து ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கவில்க்லை.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்திலேயே பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் ஃபிட்னஸ் பெற வேண்டும் என்று தீவிரம் காட்ட மாட்டோம். அவருக்கு இடுப்பில் சிறிய பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முழு ஃபிட்னஸை எட்டவில்லை என்றால் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார்.
உலகக்கோப்பை தொடர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடக்கவுள்ளது. தொடக்கத்திலேயே வீரர்களின் ஃபிட்னஸில் ரிஸ்க் எடுக்க தேவையில்லை. கடைசி நேரத்தில் வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் விளையாடாத பட்சத்தில் நம்பர் 4 வீரராக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக்ஸ் களமிறங்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் இடத்தில் அவர் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.