மும்பை : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் தற்போது ஓய்வில் இருந்து திரும்பி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார். டெஸ்ட் அணியில் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில மாதங்களாக வெறும் பேட்ஸ்மேனாக மட்டும்தான் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
முட்டி பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் பந்து வீச முடியவில்லை. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ், என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்வதற்கு இது சரியான நேரம் கிடையாது என நினைக்கிறேன்.
மருத்துவ நிபுணர்களுடன் நான் பேசி வருகிறேன். என்னுடைய காயத்தை குணமாக்க ஒரு திட்டம் இருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நிச்சயம் அந்த திட்டத்தை நான் செயல்படுத்துவேன். அந்தத் திட்டத்தை மாற்றும் எண்ணம் தற்போது இல்லை என்று கூறினார்.
மேலும் பேசிய ஸ்டோக்ஸ், அடுத்த கிரிக்கெட் சீசனில் நான் ஒரு ஆல் ரவுண்டராக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். தற்போது உலக கோப்பை தொடரில் அணிக்காக விளையாட வேண்டும்.
பிறகு முட்டி பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயத்தை சரி செய்ய வேண்டும் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். மேலும் ஒரு கேப்டனாக நான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். தற்போது கிரிக்கெட்டின் முழு வடிவமே மாறி வருகிறது. தற்போது வீரராக எந்தத் தொடரில் நான் விளையாட வேண்டும். எதில் விளையாட கூடாது என்பது குறித்து நான் முடிவெடுத்தால் அது சிறப்பாக இருக்கும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.
பொதுவாக முட்டிப் பகுதியில் அளவு சிகிச்சை மேற்கொண்டால் குறைந்தது 8 வாரத்தில் இருந்து 12 வாரம் வரை வீரர்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவது குறித்து பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 19ஆம் தேதி முடிவடையும் நிலையில் ஜனவரி 25ஆம் தேதிக்குள் பென் ஸ்டோக்ஸ் தயாராகி விடுவாரா என்று தெரியவில்லை.
இதனால் ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியை தான் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்ளும்.இதேபோன்று மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. அதற்குள் ஸ்டோக்ஸ் தனது முழு உடல் தகுதியை எட்டுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும்.