லண்டன்: இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த நிலையில், உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவை திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் திடீரென காயமடைந்தார். காயத்தின் தீவிரத்தன்மையால் ஆஷஸ் தொடரில் இருந்து ஜாக் லீச் விலகிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு ஆஃப் ஸ்பின்னர் தேவையாக இருந்தார். இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த மொயின் அலியை, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அழைத்தார்.

பென் ஸ்டோக்ஸின் கோரிக்கையை ஏற்று டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை திரும்ப பெற்று ஆஷஸ் தொடரில் பங்கேற்றார் மொயின் அலி. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற மொயின் அலி முக்கிய காரணமாகவும் அமைந்தார். அதேபோல் இங்கிலாந்து நிர்வாகம் மீண்டும் ஒரு சூட்சமத்தை மேற்கொண்டு வருகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது.
இதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து அணி நாளை உலகக்கோப்பைத் தொடருக்கான ஒருநாள் அணியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தேர்வுக்குழு, இசிபி நிர்வாகிகள் மற்றும் கேப்டன் பட்லர் ஆகியோர் இரு நாட்களுக்கு முன் சந்தித்துள்ளனர். அதில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒருநாள் அணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்பின் இங்கிலாந்து ஒயிட் பால் கேப்டன் பட்லர், பென் ஸ்டோக்ஸ் உடன் பேச்சுவார்த்தை தொடங்கினார். இந்த பேச்சுவார்த்தையில் பென் ஸ்டோக்ஸ் ஓய்வில் இருந்து மீண்டு வர சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் விளையாடி இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
பிக் மேட் பிளேயர் என்று சொல்லப்படும் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களில் முதன்மையானவர் பென் ஸ்டோக்ஸ். இவர் மீண்டும் உலகக்கோப்பைக் களத்திற்கு திரும்பியுள்ளது, ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.