
ஜூலை 8ம் தேதி துவக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இதையடுத்து கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக வரும் ஜூலை 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியினர், தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

2 போட்டிகளில் விளையாட மாட்டார்
இதனிடையே, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது இரண்டாவது குழந்தையை வரும் ஜூலை மாதத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார். தன்னுடைய மனைவியுடன் அவர் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டன் பொறுப்பு, துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி வீரர்களையும் சிறப்பாக்குவார்
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ்க்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டால், அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி போல தானும் சிறப்பாக செயல்பட்டு, தன்னுடைய அணி வீரர்களையும் சிறப்பாக செயல்பட வைக்கும் திறமை பென் ஸ்டோக்ஸ்க்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பந்து ஸ்விங் ஆகும்
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க, பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு ஐசிசி தடை விதித்துள்ள நிலையில், இந்த தொடர் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக மைதானங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், புற்கள் அதிகமாக இருக்கும் என்றும், பருவநிலையும் நன்கு கைகொடுக்கும் என்பதால் பந்து ஸ்விங் ஆவதில் பிரச்சினை இருக்காது என்றும் ஜோ ரூட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications