
ரூ.5.50 கோடிக்கு வாங்கப்பட்ட முகேஷ் குமார்
இந்த ஏலத்தில் நட்சத்திர வீரர்களுக்கு பெரிய தொகை கிடைத்த நிலையில், இந்திய உள்ளூர் வீரர்களில் யாருக்கு அதிக தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முகேஷ் குமார் என்ற வேகப்பந்துவீச்சாளருக்கு ரூ.5.50 கோடி கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருக்கும் சென்னை மற்றும் டெல்லி அணிகள் வாங்க போட்டியிட்டன.

டெல்லி, பஞ்சாப் அணிகள் போட்டி
ஆனால் முகேஷ் குமாரின் விலை ரூ.2 கோடியை கடந்த போது, சென்னை அணி போட்டியில் இருந்து விலகியது. பின்னர் பஞ்சாப் அணி முகேஷ் குமாரை வாங்க ஏலம் கேட்டது. இருப்பினும் டெல்லி அணி முகேஷ் குமாரை வாங்குவதில் மும்முரமாக இருந்தது. இறுதியாக ரூ.5.50 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. இதனால் உள்ளூர் வீரருக்கு ரூ.5.50 கோடியா என்ற ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

யார் இந்த முகேஷ் குமார்?
ஆனால் பெங்கால் அணியைச் சேர்ந்த முகேஷ் குமார் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமானவர். இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த முகேஷ், வங்கதேச அணிக்கு எதிரான இந்தியா ஏ போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டை பெற்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

புலியின் குகையில் வளர்ந்த சிங்கம்
பீகாரில் இருந்து வாழ்க்கைக்காக கொல்கத்தாவுக்கு புலம்பெயர்ந்ததால், இவரது குடும்பம் ஏராளமான சவால்களை சந்திக்க நேர்ந்துள்ளது. இருப்பினும் முகேஷ் குமார் கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் தொடர்ந்து வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் முகேஷ் குமாரின் திறமையை அறிந்த வங்கத்தின் புலியான சவுரவ் கங்குலி, தனது குகையில் வைத்து வளர்த்துள்ளார். உணவு, தங்குமிடம் அனைத்து பிரச்சினைகளும் கங்குலியால் சரி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலனாக, ரஞ்சி டிராபி தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் முகேஷ் குமார்.

தந்தையின் மரணம்
2019 -2020ம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் போது முகேஷ் குமார் பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். ஆனால் அவரது தந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு பிரச்சினை இருந்ததால், ஒவ்வொரு நாளும் காலையில் கிரிக்கெட் விளையாடிய பின், மாலையில் தந்தையுடன் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முகேஷ் குமார் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவரது தந்தை, அடுத்த சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நிறைவேறிய கனவு
இதன் பின்னர் தந்தையின் கனவை தன் கனவாக மாற்றி விளையாட தொடங்கினார் முகேஷ் குமார். ஒவ்வொரு தொடரிலும் அவரது ஆட்டம் வேகமாக முன்னேற்றம் அடைய, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கண்களில் சிக்கினார். கடந்த ஆண்டு டெல்லி அணியின் நெட் பவுலர்களில் ஒருவராக இருந்த முகேஷ் குமார் மீது பல்வேறு அணிகளும் கண் வைத்தன. அதேபோல் ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்காக அழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெல்லி அணி முகேஷ் குமாரை வாங்குவதில் முடிவாக இருந்துள்ளது.

இந்திய அணியில் முகேஷ்
ஐபிஎல் தொடரில் ரூ.5.50 கோடிக்கு முகேஷ் குமாரை வாங்கியதன் மூலம், அவரது குடும்பத்தினரின் பொருளாதார பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தந்தையும் கனவும் நிறைவேறியுள்ளது. ஆனால் ஐபிஎல் ஜெர்சியை அணிவதற்கு முன்பாக முகேஷ் குமார் இந்திய ஜெர்சியை அணிய போகிறார் என்பது தான் ரசிகர்களிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











