ஓசூர்: பெங்களூரில் உள்ள பாரம்பரியமிக்க கிரிக்கெட் மைதானமான சின்னசாமி ஸ்டேடியம் தற்போது மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் சின்னசாமி மைதானம் கட்டப்பட்டிருக்கிறது.
எனினும் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து இங்கு வெற்றி விழா நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானம் முன்பு திடீரென்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாக பார்க்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கர்நாடகா அரசு, அதிக அளவு மக்களை கையாளும் வசதி சின்னசாமி மைதானத்திற்கு இல்லை என்றும், இனி முக்கியமான போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்தக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து சின்னசாமி மைதானத்தை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டமைக்க அம்மாநில அரசு முடிவு எடுத்தது. அதன்படி தற்போது 1650 கோடி ரூபாய் செலவில் பெங்களூர் புறநகர் பகுதியான பொம்மசந்திராவில் புதிய மைதானம் அமைக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது கிரிக்கெட் மைதானம் என்ற பெயரை இது பெற உள்ளது. ஆனால் இதில் ஒரு காமெடி இருக்கின்றது. பொம்மசந்திராவில் அமைக்கப்படும் இந்த புதிய மைதானம் பெங்களூர் கிரிக்கெட் மைதானம் என்று பெயர் பெற்றிருந்தாலும், இது பெங்களூரை விட ஓசூர் அருகே இருப்பதுதான் தமிழக ரசிகர்களை தற்போது குஷிப்படுத்திருக்கின்றது.
ஓசூரில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பொம்மசந்திரா கிரிக்கெட் மைதானம் வந்துவிடும். காரிலோ பேருந்திலோ சென்றால் அரை மணி நேரத்துக்குள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து இந்த மைதானத்திற்கு சென்று விடலாம். ஆனால் பெங்களூர் நகரத்திலிருந்து பொம்மசந்திரா மைதானத்திற்கு 25 கிலோ மீட்டர் ஆகும் சாதாரணமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்தாலே இந்த இடத்திற்கு வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

அதுவே போக்குவரத்து நெரிசல் இருந்தால், சொல்ல வேண்டியது இல்லை. அட, அது கூட பிரச்சினை இல்லை. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொம்மசந்திராவில் உள்ள சூர்யா சிட்டிக்கு 80 கிமீ துரம் ஆகும். இதனால், வீரர்களின் நிலையை நினைத்து பாருங்கள். பெங்களூரை தாண்டி உள்ள ரசிகர்களுக்கும், கர்நாடகாவின் மற்ற பகுதி ரசிகர்களும் இனி கிரிக்கெட் போட்டியை பார்க்க வேண்டும் என்றால் சுமார் ஒருநாள் பயணம் செய்ய வேண்டிய நிலை வரும்.
இன்னும் சொல்லப்போனால் இது பெயருக்கு தான் கர்நாடகா கிரிக்கெட் மைதானம் ஆனால் தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், இது கர்நாடகா ரசிகர்களை விட தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக ரசிகர்கள் மிக எளிதில் இந்த மைதானத்திற்கு சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஓசூரை சுற்றியுள்ள ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் நல்ல பயனை பெறலாம்.