பெங்களூர்: கடந்த ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நிர்வாகமே காரணம் என்று கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா அரசு விசாரணை நடத்தி இருந்தது.
தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இவ்விபத்து தொடர்பான தனது நிலை அறிக்கையை அம்மாநில அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஆர்சிபி நிர்வாகம், அதன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் (கே.எஸ்.சி.ஏ) இணைந்து, காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமலும், தேவையான அனுமதிகளைப் பெறாமலும் தன்னிச்சையாக வெற்றி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஜூன் 3 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் சார்பாக கே.எஸ்.சி.ஏ தலைமை நிர்வாக அதிகாரி சுபேந்து கோஷ், ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் வெற்றிப் பேரணி நடத்தவிருப்பதாக கப்பன் பார்க் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்த போதுமான தகவல்கள் இல்லாததாலும், மிகக் குறுகிய காலத்தில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாலும் காவல்துறை இந்த கோரிக்கையை நிராகரித்தது.
இருப்பினும், தடையை மீறி, ஆர்சிபி நிர்வாகம் ஜூன் 4 ஆம் தேதி காலை 7.01 மணிக்கு தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெற்றி ஊர்வலம் மற்றும் கொண்டாட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில், அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பெங்களூரு ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாட விரும்புவதாகக் கூறிய வீடியோவும் அடங்கும். இந்த பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி, லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.
கொண்டாட்டத்திற்கு இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டதால், சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்தனர். மதியம் 3.14 மணியளவில், குறிப்பிட்ட நுழைவு வாயில்களில் இலவச பாஸ்கள் வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி, நெரிசலுக்கு வழிவகுத்தது.
போதிய திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த துயர சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று அரசு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாலும், நுழைவு வாயில்களை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும் நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவியும் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது.