பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது சமூக ஆர்வலர் ஹெச்.எம். வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
இந்த விபத்துக்கு கோலிதான் காரணம் என்று புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு எதிராக இதுவரை நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை தரப்பில், வெங்கடேஷின் புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரின் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விராட் கோலியின் பெயர் சேர்க்கப்படவில்லை. மாறாக புகாரின் ஒரு பகுதியில் அவர் பெயர் இடம் பெற்று இருக்கும். அதனால் கோலி குற்றவாளியாக கருதப்படமாட்டார். எனவே, கோலியை கைது செய்யவோ, நேரடி விசாரணைக்கோ இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.
ஆர்சிபி வெற்றியைக் கொண்டாடச் சுமார் 2-3 லட்சம் பேர் மைதானத்திற்கு வெளியே கூடியதால் (மைதானத்தின் கொள்ளளவு 35,000 பேர் மட்டுமே) இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளார்.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆர்சிபி அணியின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய் தலைவர் நிகில் சோசலே (Nikhil Sosale), வணிக விவகாரங்களுக்கான துணைத் தலைவர் சுனில் மேத்யூ (Sunil Mathew), மூத்த நிகழ்வு மேலாளர் கிரண் குமார் (Kiran Kumar) மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் டிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் சுமந்த் (Sumanth) ஆகியோர் ஆவர். நிகில் சோசலே தனது கைதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். கோலி, "வார்த்தைகள் இல்லை" என்றும், "முற்றிலும் மனமுடைந்துவிட்டேன்" என்றும் கூறினார். ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், உயிரிழந்த பதினொரு குடும்பங்களுக்கும் தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்த ரசிகர்களுக்கு ஆதரவளிக்க "ஆர்சிபி கேர்ஸ்" (RCB Cares) நிதி உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.