பெங்களூர்: இந்திய அணி வீரர்களை ஏற்றிச்சென்ற சொகுசு பஸ், தவான் உள்ளிட்ட சில வீரர்களை ஸ்டேடியத்திலேயே விட்டுவிட்டு கிளம்பியதால், வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற சம்பவம் பெங்களூரில் இன்று நடந்துள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் நடுவேயான 2வது டெஸ்ட் போட்டி, கடந்த சனிக்கிழமை, பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கியது.

முதல் நாள் ஆட்டத்தை தவிர்த்து எஞ்சிய நான்கு நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று மதியம், கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்காக நிறுத்தப்பட்டருந்த வோல்வோ சொகுசு பேருந்துகளில் ஏறி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல்களுக்கு திரும்பினர்.
ஆனால், பஸ் கிளம்புவது தெரியாமல், தவான், ராகுல், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆகியோர் மட்டும், மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர்.
சற்று தாமதமாக பஸ் கிளம்பியது தெரியவந்தது. மீண்டும் அந்த பஸ் மைதானத்திற்கு திரும்பி வந்து தங்களை பிக்-அப் செய்யும்வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று நினைத்த, இந்த நான்கு வீரர்களும், மைதானத்தின் வெளியே அவசர கால தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்சில் ஏறி, தங்களை ஹோட்டலில் டிராப் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து நான்கு வீரர்களும் ஆம்புலன்ஸ் மூலம் ஹோட்டல் சென்று அடைந்தனர். டிரைவர் அருகேயுள்ள சீட்டில் பின்னி அமர்ந்திருக்க, பின்சீட்டில், தவான், ராகுல், பங்கர் அமர்ந்திருந்து ஹோட்டலுக்கு சென்றனர்.
ஸ்டேடியத்தில் இருந்து 1 கி.மீ சுற்றளவிற்குள்தான் நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது என்பதால், வீரர்கள் பெரிய அளவில் சிரமத்தை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.