மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் மட்டுமே இந்திய அணியில் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். ஆனால், அவர் ஒன்று, இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியை விட்டு நீக்க வேண்டும் என பலரும் சொல்வார்கள், இந்திய அணி நிர்வாகமும் அந்த முடிவை எடுக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
குறைந்த ஞாபக சக்தியை மட்டும் வைத்துக்கொண்டு கே எல் ராகுல் இப்போது ஆஸ்திரேலியாவில் ஆடி வரும் ஆட்டத்தை மறந்து விட்டு அவரை அணியில் இருந்து நீக்கக் கூடாது. அவருக்கு நீண்ட கால அடிப்படையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் தினேஷ் கார்த்திக் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரராக களம் இறங்கி இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார் கே எல் ராகுல்.
இந்தத் தொடரில், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து இருந்தாலும் அவர்களை விட அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார் கே எல் ராகுல். அவர் முதல் போட்டியில் 26 மற்றும் 77 ரன்களை எடுத்தார். அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் தோற்ற நிலையில் அவர் 37 ரன்கள் மற்றும் 7 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மோசமான விக்கெட் வீழ்ச்சியை சந்தித்தபோதிலும் துவக்க வீரராக இறங்கிய கே எல் ரகுல் 84 ரன்கள் எடுத்தார். அவர் இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஆறு இன்னிங்ஸ்களில் 235 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 47 ஆக உள்ளது.
இந்த நிலையில் அவரது அபாரமான செயல்பாடு பற்றி பாராட்டி பேசி உள்ள தினேஷ் கார்த்திக், நீண்ட கால அடிப்படையில் கே எல் ராகுலுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் எனவும், ஒரு போட்டியில் ஆடவில்லை என்பதை மட்டும் வைத்து நீக்கி விடக் கூடாது எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
இது பற்றி தினேஷ் கார்த்திக் பேசுகையில், "நான் கே எல் ராகுலை நம்புகிறேன். இந்திய அணிக்கு தேவையான துவக்க வீரர் அவர் தான். எனவே, அவரை நாம் ஆதரிக்க வேண்டும். ஒரு வருடத்தில் ஏதேனும் ஒரு தொடரில் அவர் ஒன்று, இரண்டு முறை குறைவான ஸ்கோரை அடித்து விட்டால் அவரை நீக்க கூடாது. நமக்கு குறைவான ஞாபக சக்தி இருக்காது என நம்புகிறேன். அவர் இன்று செய்து வரும் விஷயம் மிகவும் மதிக்கத்தக்கது. அதற்கு நாம் மதிப்பு கொடுத்து அவரை அணியில் நீடித்து இருக்க வைக்க வேண்டும்." என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதன் மூலம் கே எல் ராகுலுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும் எனவும், ஓரிரு போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என்பதை மட்டும் வைத்து அணியில் இருந்து நீக்கக்கூடாது என தினேஷ் கார்த்திக் வலியுறுத்தி இருக்கிறார்.