பெங்களூரு : இந்திய அணியின் முன்னணி வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்து குணமடைந்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அவர் நாளை தென்னாபிரிக்கா ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர் குமார் இங்கிலாந்து தொடரின் போது முதுகு வலியால் அவதிப்பட்டார். அதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 18 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் புவனேஸ்வர் குமார் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கடந்த நான்கு வாரங்களாக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நான்கு அணிகள் பங்குபெறும் ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ, பி,தென்னாபிரிக்கா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் பங்குபெற்று விளையாடி வருகிறது.
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் இந்திய பி அணிகள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்திற்கான போட்டிக்காக நடக்கும் ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் இந்திய ஏ அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் முழுமையாக தயாராக இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது போட்டியில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.