டெல்லி: முதுகு வலியில் இருந்து முழுமையாக குணமாகாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்களில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட்களிலும் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது டெஸ்ட் நாளை துவங்க உள்ளது.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி-20 மற்றும் ஒருதினப் போட்டித் தொடருக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றிருந்தார்.
காயம் காரணமாக மூன்றாவது டி-20 போட்டி மற்றும் முதல் இரண்டு ஒருதினப்போட்டிகளில் புவனேஷ் குமார் விளையாடவில்லை. கடைசி ஒருதினப் போட்டியில் அவர் பங்கேற்றார். அதனால் அவருடைய முதுகு வலி தீவிரமடைந்ததாகக் கூறப்பட்டது. அதையடுத்து நாடு திரும்பிய அவர் சிகிச்சையுடன், பயிற்சியும் பெற்று வருகிறார்.
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும், கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வலியில் இருந்து அவர் முழுமையாக குணமாகவில்லை. அதனால் கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.