
முதல் பரிசோதனை
இந்திய அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கடந்த மாதம் (மே) 20ம் தேதி உயிரிழந்தார். இந்த சோகத்தில் இருந்து அவரின் குடும்பத்தினர் மீளாத சூழலில் அதற்கு அடுத்த நாளே புவவனேஷ்வர் குமாரின் தாயாருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் ஆனால் முடிவு நெகட்டிவ் என்று வந்தது.

குவாரண்டைன்
இந்நிலையில் புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புவனேஷ்வர் குமார் தாயாருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததையடுத்து கொரோனா அறிகுறிகள் உருவானதாகத் தெரிகிறது.

வாய்ப்புகள் குறைவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செல்லும் இந்திய அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

கட்டாயம்
ஆனால் புவனேஷ்வர் குமாருக்கு ஒருவேளை கொரோனா உறுதியானால் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்பது கடினமாகும். 31 வயதாகும் புவனேஷ்வர், அடுத்தடுத்து காயத்தால் பாதிக்கப்பட்டதால் கடந்த 2018ம் பிறகு இதுவரை ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வபோது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரக்கூடிய டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு பெற வேண்டும் என்றால் புவனேஷ்வர் குமார் கண்டிப்பாக இலங்கை தொடரில் விளையாடியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications