லக்னோ: உத்தரப் பிரதேச பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், 3 பந்துகளில் 2 சிக்சர்களை விளாசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் இர்ஃபான் பதான் விட்டுச் சென்ற இடத்தை அப்படியே எந்தவித பதற்றமும் இல்லாமல் நிரப்பியவர் புவனேஷ்வர் குமார். பவர் பிளே ஓவர்களில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று பேட்ஸ்மேன்களை திணற வைத்துவிடுவார் என்றே சொல்லலாம். 2012ஆம் ஆண்டு 2023ஆம் ஆண்டி வரை இந்திய அணியின் பவர் பிளே ஓவர்களை வீசி வந்துள்ளார்.

ஆனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் எழுச்சியால் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் புவனேஷ்வர் குமார் ஓரம்கட்டப்பட்டார். அதன்பின் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடிய புவனேஷ்வர் குமார், 14 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் புவனேஷ்வர் குமார், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளார்.
அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் வகையில் புவனேஷ்வர் குமார், யுபி டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். இந்த டி20 லீக் தொடரில் வெறும் பந்துவீச்சாளராக மட்டுமல்லாமல், பேட்ஸ்மேனாகவும் புவனேஷ்வர் குமார் அசத்தி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
நொய்டா அணிக்கு எதிரான போட்டியில் மீரட் அணிக்காக களமிறங்கிய புவனேஷ்வர் குமார், கடைசி ஓவரை எதிர்கொண்டார். அப்போது இளம் வீரர் டொய்லா வீசிய கடைசி ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார், 2 சிக்சர்களை விளாசி அசத்தினார். இந்த வீடியோ இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆட்டத்திற்கு பின் புவனேஷ்வர் குமார் பேசுகையில், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும், புதியவற்றை கற்று கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போது கிரிக்கெட் விளையாடவில்லை. வேகப்பந்துவீச்சாளராக என் கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். அதனையறிந்து மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.