“எனக்கும் ஆசை தான்”.. புவனேஸ்வர் குமார் நேரடி பதில்.. இந்திய அணியில் வாய்ப்பு அளிக்குமா பிசிசிஐ?
லக்னோ: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், தான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு திரும்புவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த ஒற்றை வரி பதில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவில் பரவி வருகிறது. நீண்ட காலமாக அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் பிசிசிஐ புறக்கணித்து வரும் நிலையில் அவர் நேரடியாக வாய்ப்பு கேட்டுள்ளார்.
உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் லக்னோ பால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமாரிடம், "நீங்கள் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்" எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த புவனேஷ்வர் குமார், "எனக்கும் ஆசை தான்" என்று கூறினார்.

தொடர்ந்து, "உள்ளூர் தொடரில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகிறீர்கள், இதேபோல இந்திய ஜெர்சியிலும் விளையாடினால் நன்றாக இருக்கும்" என்று தொகுப்பாளர் கூறினார். அதற்கு புவனேஷ்வர் குமார், "அது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்" என்று பதிலளித்தார்.
கடந்த 2022 நவம்பர் மாதத்திற்குப் பிறகு புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர், 2026 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக இருந்தது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உபி டி20 லீக் தொடரில் லக்னோ பால்கன்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவர், 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக கடந்த செப்டம்பர் 3 அன்று மீரட் மேவரிக்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இவரது இந்த அபார ஃபார்ம் காரணமாக, அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

