சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவின் ‘பிக் பாஷ்’ கிரிக்கெட்.. பிசிசிஐ அனுமதி அளித்தது எப்படி?
சென்னை: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' (BBL) வரலாற்றில் முதல்முறையாக இந்திய மண்ணில் கால்பதிக்க உள்ளது. 2026-27 சீசனின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக இதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு வாரியங்களுக்கும் இடையே நடந்து வந்தன. தொடக்கத்தில் பிசிசிஐ இதற்குச் சம்மதிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த ஆலோசனைகள் சாதகமாக முடிந்தன. இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு, சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது. நேற்று நடந்த சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டி நடந்த சமயத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ஆஸ்திரேலிய குழுவினரைச் சந்தித்துப் பேசினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தகம் மற்றும் விளையாட்டு உறவை மேம்படுத்தும் ஒரு பகுதியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் பல போட்டிகளை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டாலும், கால அட்டவணை நெருக்கடி காரணமாகத் தொடக்க ஆட்டத்தை மட்டும் சென்னையில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க ஆட்டத்தில் பிபிஎல் தொடரின் நடப்புச் சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி விளையாட உள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், தனது சொந்த அணியான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காகச் சென்னையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னை ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
மழை சவால்
இந்த ஆட்டம் டிசம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் டிசம்பர் மாதம் பருவமழை உச்சத்தில் இருக்கும் என்பதால், வானிலை ஒரு பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதையும் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகள் குறித்து இரு நாட்டு வாரியங்களும் ஆலோசித்து வருகின்றன.
கடந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது. இப்போது ஒட்டுமொத்தத் தொடரின் தொடக்க ஆட்டமே சென்னைக்கு வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ-யின் இந்த அனுமதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய மைதானங்களின் மதிப்பு பன்மடங்கு உயரும்.


Click it and Unblock the Notifications
