மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்று விட்ட நிலையில் சுரேஷ் ரெய்னா பிக் கிரிக்கெட் லீக் என்ற உள்ளூர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் 26 பந்துகளில் 51 ரன்கள் அடித்து மிரள வைத்தார். ஆனாலும் அவரது அணி இறுதி போட்டியில் இர்ஃபான் பதான் அணியிடம் தோல்வி அடைந்தது.
பிக் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் மும்பை மரைன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், மும்பை மரைன்ஸ் அணியின் கேப்டனாக இர்ஃபான் பதானும் செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் துவக்க வீரர் ஃபில் மஸ்டர்ட் 39 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். சுரேஷ் ரெய்னா 26 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். அபிமன்யு மிதுன் 22 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். ஃபாய்ஸ் ஃபைசல் 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். மும்பை மரைன்ஸ் அணிக்கு எதிராக 211 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்தப் பெரிய இலக்கை நோக்கி ஆடிய மும்பை மரைன்ஸ் அணியின் துவக்க வீரர் மிஹிர் அகர்வால் 2 ரன்களிலும், மலிந்தா புஷ்பகுமரா 13 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் வந்த ஜெசல் கரியா மற்றும் மனன் சர்மா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர்.
ஜெசல் கரியா 39 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். அவர் 13 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். மனன் சர்மா சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 42 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். அதில் ஆறு சிக்ஸ் மற்றும் ஏழு ஃபோர் அடங்கும். கடைசி நேரத்தில் கேப்டன் இர்ஃபான் பதான் அதிரடி ஆட்டம் ஆடினார்.
அவர் 18 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து மும்பை மரைன்ஸ் 19.1 ஓவரில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிக் கிரிக்கெட் லீக் தொடரை மும்பை மரைன்ஸ் அணி வென்றது.