மெல்போர்ன் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த முறை 2022 ஆம் ஆண்டு பிர்மிங்காம் நகரில் இந்த தொடர் நடைபெற்றது. இதில் 72 நாடுகளை சேர்ந்த ஐந்தாயிரத்து 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் கிரிக்கெட் உள்ளிட்ட 20 விளையாட்டுகள் நடத்தப்பட்டன.இந்த நிலையில் அடுத்த காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியாலின் நியூ விக்டோரியா மாகாணத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இந்த தொடரை நடத்த முதலில் இந்திய ரூபாய் மதிப்பில் 11 ஆயிரம் கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. ஆனால் அதற்கான பட்ஜெட் தற்போது 39 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிகிறது. இந்த அளவுக்கு தங்களிடம் பட்ஜெட் இல்லை என்றும் மற்ற திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து பணத்தை எடுத்தால் மட்டுமே காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியும் என்பதால் இந்த போட்டியில் நடத்துவதில் இருந்து நாங்கள் விலகிக் கொள்வதாக நியூ விக்டோரியா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இத்தனை தொகையை நாங்கள் செலவழித்தாலும் தங்களுக்கு மிக குறைந்த அளவிலே வருமானம் வரும் என்றும் இதனால் தங்களுக்கு எந்த பயனும் இருக்காது என்பதாலும் இந்த கடின முடிவை எடுத்திருப்பதாக அந்த அரசு கூறியுள்ளது. நியூ விட்டோரிய அரசு விலகிய நிலையில் ஆஸ்திரேலியாவின் மற்ற மாகாணங்களும் இந்த போட்டியை நடத்த முன்வரவில்லை. இந்த நிலையில் இந்த போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள பெர்த் நகர மேயர், ஆனால் காமன்வெல்த் எதிர்பார்க்கும் செலவை தங்களால் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
எங்கள் நகரில் நான்கு மைதானங்கள் இருக்கிறது. அந்த நான்கு மைதானங்களையும் வைத்து உங்களால் போட்டியை நடத்தி கொள்ள முடியும் என்றால் நடத்துங்கள். இல்லையெனில் எங்களாலும் உதவ முடியாது என்று கைவிரித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் விளையாட்டுக்கு என்று இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பணத்தை ஒதுக்கினாலும் அது நஷ்டத்திலேயே போய் முடிவடைகிறது.
இதன் காரணமாக தற்போது காமன்வெல்த் போன்ற போட்டிகளை நடத்த எந்த நாடும் முன் வருவதில்லை. இதனால் திட்டமிட்டபடி காமன்வெல்த் போட்டி 2026 ஆம் ஆண்டு நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. 1930 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் காமன்வெல்த் போட்டி இரண்டாம் உலகப்போரில் மட்டும் தான் நடத்தப்படாமல் தடைப்பட்டது. கடைசியாக இந்தியா 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.