மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் ஆன ரிஷப் பண்ட், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடல் தகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் இந்த மூவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது உடல் தகுதியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் நினைத்ததை விட மிகவும் வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். தற்போது பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ரிஷப் பண்ட் கையில் குச்சி இல்லாமல் நடக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்.தற்போது ரிஷப் பண்ட் எந்த துணையும் இன்றி மாடிப்படி ஏறி வருகிறார்.
ரிஷப் பண்ட்க்கு தற்போது வலி ஏதும் ஏற்படவில்லை என்பதால் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிஷப் பந்த் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. பும்ராவை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு திரும்பி இருக்கிறார்.
பும்ராவுக்கு தற்போது பிசியோதெரபி நிபுணர்கள் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அதேசமயம் தற்போது அவர் மெதுவாக பந்து வீசியும் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். இன்னும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இரண்டு மாதங்கள் இருப்பதால் பும்ரா அந்த தொடரில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த மே மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது பிசியோதெரபி பயிற்சியில் பெற்று வருகிறார்.
இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் உடல் தகுதியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடருக்கு முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. இது இந்திய அணியின் பலத்தை மேலும் அதிகரிப்பதோடு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.