மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியை வழிநடத்தும் கம்பிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஒரே நேரத்தில் இரண்டு அடி விழுந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுலுக்கு, அண்மையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் சிஎஸ்கேக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ராகுலுக்கு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் ராகுலுக்கு ஏற்பட்டிருக்கிற காயம் கொஞ்சம் சீரியஸ் ஆகவே இருக்கிறதாம்.

இதன் காரணமாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலாவது, ராகுல் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த தொடருக்கு இன்னும் ஒரு மாத காலம் நேரம் இருக்கிறது. ஆனால் ராகுலின் காயம் குணமடைய வாய்ப்பு இல்லை என்பதால் அந்தத் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் லக்னோ அணிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கே எல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வைக்கலாம் என ராகுல் டிராவிட் முடிவெடுத்திருந்தார். தற்போது அதற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதே நிலையில் கே எல் ராகுல் காயம் அடைந்திருப்பதால் மாற்று வீரர்களை தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு முதல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சன் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். மேலும் நடுவரிசையில் நன்றாக விளையாடக் கூடியவர். இதேபோன்று மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் ரிஷப்பண்டை போல் அவரை பயன்படுத்தலாம் என இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. ஏற்கனவே விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.