என்னது டோணிக்கும், கோஹ்லிக்கும் சண்டையா.. ஷாக் ஆகும் சாஸ்திரி!
டெல்லி: இந்திய அணியில், டோணியும், விராட் கோஹ்லியும் இணைந்த கரங்களாக செயல்பட்டுவருகிறார்கள், அவர்களுக்குள் எந்த தகராறும் இல்லை என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனரான, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:

சகோதரர்
இளம் வீரர்களிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. விளையாட்டு போட்டிகளில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். ரவி சாஸ்திரி நம்முடைய மூத்த சகோதரர் போல் இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று எந்த விஷயத்தை பற்றியும் பேசலாம் என்ற ஆறுதல் இப்போது இந்திய அணியில் ஏற்பட்டுள்ளது.

மோசமான வதந்தி
டோணிக்கும், விராட் கோஹ்லிக்கும் இடையே விரிசல் என்று கூறுகிறார்கள். ஆனால், அங்கு என்ன நடக்கிறது என்று மக்கள் உணரவில்லை. அவர்கள் இரண்டு பேரும் பரஸ்பரம் மரியாதை வைத்துள்ளனர். நான் கேள்விப்பட்டதில் மிக மோசமான வதந்தி இதுதான்.

பெரும்பாலும் ஜெயமே
டோணியும், கோஹ்லியும் மரியாதை வைத்து ஆடிவருவதால்தான், கடந்த ஆண்டில், இந்தியா தனது 70 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோஹ்லி இளமை துடிப்பால் செயல்படுபவர். இப்போதுதான் அவருக்கு 26 வயதாகிறது. இன்னும் ஒன்றிரெண்டு ஆண்டுகளில் அவர் மேலும் பக்குவப்படுவார்.

டோணியெல்லாம் லெஜன்ட்
டோணி ஒரு லெஜன்ட். அவருக்கென்று தனிப்பாதை வைத்து ஆடுகிறார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதையே இதற்கு உதாரணமாக சொல்லலாம். தன்னால் முடியாது என்றவுடன் விலகிவிட்டார். ஆனால் பெரும்பாலானோர் 100 டெஸ்ட் என்ற மைல் கல்லை எட்டிவிட்டு ஓய்வு பெறவே விரும்புவார்கள்.

இன்னும் இருக்கு
தவான், ரோகித் ஷர்மா, ரஹானே போன்றோர் சாதித்துவிட்டதாக நான் கருதவில்லை. அவர்களின் பெஸ்ட் இனிமேல்தான் வரப்போகிறது. உலகிலுள்ள அனைத்து நாட்டு வீரர்களும் இந்த வீரர்கள் மீது மரியாதை வைத்துள்ளனர். ஆஸ்திரேலியர்களுக்கும் கூட, இவர்களை ஜாக்கிரதை உணர்வோடுதான் கையாளுகின்றனர்.
மேலும், பேட்டிங் ஸ்டைலில் என்ன மாற்றம் சொல்லிக் கொடுத்தாலும், உடனே அதை செயல்படுத்தி பார்க்கும் ஆர்வம் அவர்களிடம் உள்ளது.

இந்தியா கில்லி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 4 டெஸ்ட் போட்டிகளிலுமே, 400 ரன்களை கடந்தோம். ஒவ்வொருமுறையும் வெற்றியின் விளிம்புவரை வந்தோம். மேலும், உலக கோப்பையில் இந்தியா செயலாற்றிய விதம் அருமை. எப்போதுமே, முக்கியமான போட்டிகளை வைத்துதான் அணியின் தகுதி நிர்ணயிக்கப்படும். முக்கியமான போட்டிகளில் இந்தியா எப்போதுமே சிறப்பாகத்தான் ஆடி வருகிறது. இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications